Published : 07 Apr 2021 09:47 AM
Last Updated : 07 Apr 2021 09:47 AM

50 சதவீத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி

நேற்று நடைபெற்ற 5 மாநில தேர்தலில் மொத்தம் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவுற்றது.

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலின் ஒரே கட்ட வாக்குப்பதிவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடைபெறும் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.

மொத்தம் 475 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,53,538 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில் கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.

அனைவரும் பங்கு பெறும் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய தேர்தலை உறுதி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வாக்கு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது.

இந்த வாக்காளர்களுக்கு முறையான வசதிகள் வழங்கப்பட்டதை களத்தில் உள்ள பார்வையாளர்கள் உறுதி செய்தனர்.

விதிகளின்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக கடந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இவை சோதிக்கப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஒருமுறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சோதித்து பார்க்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள், நேரடி ஒளிபரப்பு முறையில் கண்காணிக்கப்பட்டன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x