Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
தெலுங்கு உகாதி பண்டிகை வருவதையொட்டி, நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வரும் 13-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, நேற்று காலை ஆகம சாஸ்திரங்களின்படி கோயிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையொட்டி மூலவர் சன்னதி உட்பட பலிபீடம், கொடிக்கம்பம், விமான கோபுரம், உப சன்னதிகள் முதற்கொண்டு கோயிலின் உள்புற சுற்றுச்சுவர்கள் அனைத்தும் பன்னீர், சந்தனம், குங்குமப்பூ, மஞ்சள், குங்குமம் கலந்த வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட உயர் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT