Last Updated : 06 Apr, 2021 02:19 PM

 

Published : 06 Apr 2021 02:19 PM
Last Updated : 06 Apr 2021 02:19 PM

கரோனா பரவலைத் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி; குறிப்பிட்ட நேரத்துக்கு லாக்டவுன் தேவை: பிரதமர் மோடிக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்

பிரதமர் மோடி: கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும். கரோனா சங்கிலியை உடைக்க குறிப்பிட்ட நேரத்துக்குத் தொடர்ச்சியாக லாக்டவுன் அவசியம் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். சராசரியாக 90 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பல ஆலோசனைகளைக் கடிதம் மூலம் வழங்கி, அதைச் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் கரோனா தடுப்பூசியைத் தற்போது செலுத்தி வருகிறோம். ஆனால், கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதால், நம்முடைய தடுப்பூசி செலுத்தும் முறையைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்தி, மாற்றி அமைக்க வேண்டும்.

ஆதலால், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதியளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாக, தடுப்பூசியை கரோனா தடுப்பூசி மையத்தில் செலுத்திக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் பணியில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் கொண்டு வருவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனிநபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் மந்தத் தடுப்பாற்றலையும் ஏற்படுத்தும்.

அனைத்துவிதமான மருத்துவர்கள், கிளினிக் நடத்திவரும் மருத்துவர்களையும் தடுப்பூசி செலுத்துவதில் ஈடுபடுத்தினால், நேர்மறையான விளைவுகள் ஏற்படும்.

மிகப்பெரிய அளவில் மக்கள் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய அரசு, தனியார் சார்ந்த குழுவை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுக்கள் தடுப்பூசி மூலம் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் கண்காணிக்கும், நம்பிக்கையை உருவாக்கும்.

கரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்க, உயர்ந்துவரும் பாதிப்பைத் தடுக்க, குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ந்து ஊரடங்கைப் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக திரையரங்குகள், கலாச்சார, மதரீதியான வழிபாடுகள், விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x