Last Updated : 06 Apr, 2021 11:34 AM

 

Published : 06 Apr 2021 11:34 AM
Last Updated : 06 Apr 2021 11:34 AM

கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது; இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்: முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை

கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் வாக்களிக்க வந்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

கண்ணூர்

கேரளாவில் பாஜகவுக்கு இந்த முறை ஒரு இடம் கூட கிடைக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சி.ரகுநாத் போட்டியிடுகிறார்.

காலை வாக்குப்பதிவு தொடங்கியிதிலிருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். காலை 9.30 மணி நிலவரப்படி கேரளாவில் 16 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

முதல்வர் பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் இன்று வாக்களித்தார். அதன்பின் முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறேன். இடதுசாரிகளுடன் துணையாக இருக்கும் மக்கள் மீது தீவிரமான நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் உள்ளாட்சித் தேர்தலின்போது மாபெரும் வெற்றியளித்து நிரூபித்துவிட்டார்கள். இது சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மக்கள் இடதுசாரிகளுக்கு அளப்பரிய ஆதரவு அளித்ததை தேர்தல் பிரச்சாரத்தில் காண முடிந்தது.

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள், வெள்ளம், மழை, தொற்றுநோய் போன்ற காலங்களில் நாங்கள் செய்த உதவிகள், திட்டங்கள், சேவைகளால் மக்கள் நிச்சயம் எங்களுடன் இருப்பார்கள். அனைத்து நேரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக இருந்த மக்கள் நிச்சயம் நல்லவிதமான தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

பாஜக, நீமம் தொகுதியில் மட்டும் கடந்த தேர்தலில் வென்றது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவிடமாட்டோம். பாஜகவுடன் சில தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ரகசிய உடன்பாடு ஏதும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

கடந்த தேர்தலைவிட இந்த முறை நாங்கள் வரலாற்று வெற்றி பெறுவோம். ஐயப்ப பக்தர்களும், அனைத்துக் கடவுள்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஹரிபாட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும். ஊழல் அரசிடம் இருந்து விடுபட்டு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இரு மழைவெள்ளம், நிபா, ஒக்கி புயல், கரோனா வைரஸ் ஆகியவற்றைக் கையாண்ட இடதுசாரிகள் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கோபத்தை இடதுசாரி அரசு எதிர்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x