Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

மகாராஷ்டிராவில் மீண்டும் பொது முடக்கம்- சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்

கோப்புப் படம்

நாசிக்

மகாராஷ்டிராவில் மீண்டும்பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து போக்குவரத்தும் முடங்கியதால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைஇழந்ததுடன் சொந்த ஊர் திரும்பமுடியாமல் தவித்தனர். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் நடந்தே செல்லத் தொடங்கினர். இதனால் பசி, சோர்வால் பலர் உயிரிழந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சோனு சூட் உட்பட நல்ல உள்ளங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவினர்.

பின்னர் பொது முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, மகாராஷ்டிரா முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவுநேரத்திலும் (8 மணி முதல் காலை 7 மணி வரை) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பகல், இரவு என முழு நேரமும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநில எல்லை மூடப்படும் என்ற அச்சத்தால், நாசிக் நகரில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

உணவகங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் தங்கள் குடும்பத்தினருடன் ரயில் மூலம் சொந்த மாநிலம் திரும்பினர்.

உ.பி. கான்பூரை சேர்ந்த ரோஷன் குமார் சிங் நாசிக்கில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக பணிபுரிந்தார். இவர் தனது மனைவி, 3 குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதுகுறித்து ரோஷன் கூறும்போது, “என் சகோதரர் இங்கேயே உள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் என்னுடன் சொந்த ஊர் திரும்புகின்றனர். பொது முடக்கம் அமலுக்கு வந்தால் சிக்கி விடுவோம். அதனால் ஊருக்கு செல்கிறோம்” என்றார்.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த அனுராக் சிங் கூறும்போது, “நான் எனது குடும்பத்தினருடன் உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளோம். அங்கு இப்போது நிலைமை சீராக உள்ளது. அங்கு எங்களுக்கு வயல் உள்ளது. அதை வைத்து சமாளித்துக் கொள்வோம். தங்குவதற்கும், உணவுக்கும் பிரச்சினை இருக்காது” என்றார்.

உணவகங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களை சொந்த ஊருக்குசென்று விடுமாறு அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

நாசிக் உணவகங்கள் சங்கத் தலைவர் சஞ்சய் சவாண் கூறும்போது, “வர்த்தகம் செய்வதற்குகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால், பலர் தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x