Published : 09 Nov 2015 08:28 AM
Last Updated : 09 Nov 2015 08:28 AM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தாலும் அதிக ஓட்டு சதவீதம் பெற்ற தனிப்பெரும் கட்சியாக முதலிடம் பிடித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 59 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.
பகையை மறந்து லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமாரின் மகா கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தபோதிலும் அதிக ஓட்டு சதவீதம் பெற்ற தனிப்பெரும் கட்சியாக முதலிடம் பிடித்துள்ளது.
அந்த வகையில் பாஜக 24.8 சதவீதமும், அதற்கு அடுத்தபடியாக லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 18.5 சதவீதமும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16.7 சதவீதமும் பெற்றுள்ளன.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் முறையே 4.8 மற்றும் 2.2 சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளன. மகா கூட்டணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸுக்கு வெறும் 6.7 சதவீத ஓட்டுக்களே கிடைத்துள்ளன.
நிதிஷ்குமாரின் மெகா கூட்டணி யில் இணைய மறுத்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி ஒரு சதவீத ஓட்டும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2 சதவீத ஓட்டுக்களும் பெற்றுள்ளன.
முஸ்லிம் ஓட்டுக்களை குறிவைத்து முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்த அஸதுாதீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வெறும் 0.2 சதவீதமே கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT