சத்தீஸ்கர் என்கவுன்டர்: மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 22 வீரர்கள் பலி: அமித் ஷா இரங்கல்

சத்தீஸ்கர் என்கவுன்டர்: மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 22 வீரர்கள் பலி: அமித் ஷா இரங்கல்
Updated on
1 min read

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இடத்தில் மேலும 22 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் நேற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.

இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். 15 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 5 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பல வீரர்களில் காணாமல் போயுள்ளனர். இதனால் உடனடியாக கூடுதல் படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

அந்த பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி காணாமல் போன ஒரு வீரரை தேடி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் வீர மரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

வீரர்களின் தியாகத்தை தேசம் ஒருநாளும் மறக்காது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிரியாக உள்ள இவர்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in