Published : 03 Apr 2021 06:43 PM
Last Updated : 03 Apr 2021 06:43 PM

‘‘ஜெய் ஸ்ரீராம்  என்றால்  மம்தா பானர்ஜிக்கு எரிச்சல் ஏற்படுகிறதே; வாரணாசிக்கு சென்றால் ஹர ஹர மகாதேவ் என கோஷமிடுவார்களே’’- பிரதமர் மோடி கிண்டல்

கொல்கத்தா

மேற்குவங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை கேட்டு மம்தா பானர்ஜிக்கு எரிச்சலை தருகிறது, இங்கு தோல்வியடைந்து வாரணாசிக்கு சென்றால் ஹர ஹர மகாதேவ் என கோஷமிடுவார்களே, அப்போது மம்தா பானர்ஜி என்ன செய்வார் என பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் தேர்தலை சந்தித்தது. இங்கு மம்தாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.

இவர், அந்தத் தொகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர் என்பதால், இத் தேர்தலானது மம்தா பானர்ஜிக்கு மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா பகுதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி “நந்திகிராம் தொகுதியில் தான் தோல்வி அடைவது உறுதி என்பது மம்தாவுக்கு தெரிந்துவிட்டது. அதனால், இறுதிக்கட்ட தேர்தலில்வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என்பதை மம்தா தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி ‘‘நந்திகிராம் தொகுதியில் நான் வரலாறு காணாத வெற்றியை பெறுவேன். ஆதலால், வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படியே இருந்தாலும், நீங்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ தேவையில்லை.’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் மம்தா பானர்ஜி வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த கட்சியில் உள்ள அறிவாளிகள் சிலர் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அது இரண்டாவது பெரிய தவறாக முடிந்து விடும் என்றும், இரண்டு தொகுதிகளிலும் அவர் தோற்று விடுவார் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால் திரிணமூல் காங்கிரஸ் ஒரு கட்சியாக செயல்படுவதே கடினமாகி விடும் எனக் கூறியுள்ளனர். மம்தா பானர்ஜி தற்போது வாரணாசியில் போட்டியிடுவார் என அவரது கட்சியினர் கூறுகின்றனர்.

இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஒன்று மேற்குவங்கத்தில் அவர் தோற்பது உறுதியாகியுள்ளது. இதனால் மேற்குவங்கத்திற்கு வெளியே ஒரு இடத்தை அவர் தேடுகிறார் என தெரிகிறது. வாரணாசியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டால் அங்கு அவருக்கு எரிச்சல் ஏற்படுமே.

மேற்குவங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை கேட்டு மம்தா பானர்ஜிக்கு எரிச்சலை தருகிறது. வாரணாசிக்கு சென்றால் ஹர ஹர மகாதேவ் என கோஷமிடுவார்களே. அப்போது மம்தா பானர்ஜி என்ன செய்வார்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x