Published : 02 Apr 2021 03:11 AM
Last Updated : 02 Apr 2021 03:11 AM

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி: புதிய சாதனை படைத்தது

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார செயல்பாடுகள் பெருமளவு முடங்கின. இதனால் தொழில் துறையினருக்கு வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசுக்கு வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. அதன்பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் தொழில்கள் மெல்ல மீண்டு வரத் தொடங்கின. வரி வருவாயும் மெல்ல பழைய நிலைக்குத் திரும்பியது. ஜிஎஸ்டி வசூலும் கடந்த ஆறு மாதங்களாக ரூ.1 லட்சம் கோடி அளவை தொடர்ந்து கடந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.23 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியாக வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.22,973 கோடியும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டிரூ.29,329 கோடியும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.62,842 கோடியும், செஸ் வரி ரூ.8,757 கோடியும் வசூல் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலான ரூ.62,842 கோடியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,230 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x