Last Updated : 01 Apr, 2021 04:46 PM

 

Published : 01 Apr 2021 04:46 PM
Last Updated : 01 Apr 2021 04:46 PM

நந்திகிராம் வாக்குப்பதிவில் வன்முறை; அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்: அமித் ஷா உத்தரவுப்படி நடப்பதாக மம்தா குற்றச்சாட்டு

நந்திகிராமில் தேர்தல் பணிகளைக் கண்காணித்த மம்தா பானர்ஜி: படம் | ஏஎன்ஐ.

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் உள்ள போயல் பகுதியில் இன்று நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விரிவான அறிக்கையைத் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் முடிந்த நிலையில் 30 தொகுதிகளுக்கு 2-ம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. இன்று நடக்கும் 30 தொகுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது நந்திகிராம் தொகுதியாகும்.

நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும் போட்டியிடுகின்றனர். இதனால் பதற்றம் நிறைந்ததாக நந்திகிராம் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும்வரை நந்திகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நந்திகிராம் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது முதல், மம்தா பானர்ஜி வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளைச் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே ஆய்வு செய்து வருகிறார்.

அப்போது, போயல் பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வந்தபோது, அங்கிருந்த பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் திடீரென கைகலப்பில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த போலீஸார் தலையிட்டு இரு தரப்பினர் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து துணைத் தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயின் மாவட்ட நிர்வாகத்துக்குப் பிறப்பித்த உத்தரவில், "போயல் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். கேஷ்பூர் பகுதியில் இன்று காலை நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

போயல் பகுதியில ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்திய பாதுகாப்புப் படையினர்

பாஸ்சிம் மெதினாபூர் மாவட்டத்தில் உள்ள கேஷ்பூர் பகுதியில் இன்று காலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியவுடன், நடந்த மோதலில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்று காலை முதல் 63 புகார்களைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துவிட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதலால், நீதிமன்றத்தை நாடப் போகிறோம். அமித் ஷாவின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் நடக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்கள் வந்து அராஜகம் செய்கிறார்கள், வாக்காளர்களை மிரட்டுகிறார்கள். போயல் பகுதியில் உள்ள 7-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x