Published : 01 Apr 2021 12:46 PM
Last Updated : 01 Apr 2021 12:46 PM

மம்தா பானர்ஜி- சுவேந்து அதிகாரி மோதும் நந்திகிராம்; விறுவிறுப்பான வாக்குப்பதிவு: பாஜக தொண்டர் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதேசமயம் இங்கு பாஜக தொண்டர் ஒருவரின் உடல் தூக்கில் தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்துக் கொன்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

நந்திகிராம் தொகுதி கிழக்கு மித்னாபூர் மாவட்டத்துக்குட்பட்டது. நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது. நந்திகிராமில் திரிணமூலுக்கு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்ததில் சுவேந்து அதிகாரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தனது மக்கள் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்டே, நந்திகிராமில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது மம்தாவை வீழ்த்துவேன் என சுவேந்து அதிகாரி சவால் விட்டுள்ளார். அதுமட்டுமின்றி மிட்னாபூர் எப்போதுமே மண்ணின் மைந்தனையே தேர்வு செய்யும் எனவும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

சுவேந்து அதிகாரி கட்சிக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவுக்கு தாவி விட்டார், அவருக்கு வாக்களித்த மக்களையும் அவர் முதுகில் குத்தி விட்டார் என மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார்.

இதனால் நந்திகிராம் நட்சத்திர தொகுதி என்பதை விடவும் பரபரப்பான தொகுதியாக மாறியுள்ளது. இருதரப்பினரும் இந்த தொகுதியை கைபற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நந்திகிராம் தொகுதியில் பாஜக தொண்டர் ஒருவரின் உடல் தூக்கில் தொடங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்துக் கொன்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கூறுகையில் ‘‘நந்திகிராமில் உள்ள சம்சாபாத் கஞ்சன் நகரில் பாஜக ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொடங்க விட்டது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களே. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.’’ எனக் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகவே பாஜக தொண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கட்சி கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x