Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்க 33,000 கி.மீ. இந்து விழிப்புணர்வு யாத்திரை: ஏழுமலையான் தரிசனத்துடன் திருப்பதியில் நிறைவு

சாரதா பீடத்தின் இளம் பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்திரா தலைமையிலான குழுவினர் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

திருமலை

ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்கும் விதத்தில் 33 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை, சாரதா பீடம் சார்பில் இந்து தர்ம பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த யாத்திரை நேற்று திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துடன் நிறைவடைந்தது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடம் சார்பில்கடந்த 2019-ம் ஆண்டு இந்து தர்மபிரச்சார யாத்திரை தொடங்கப்பட்டது. இளம் பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்திரா தலைமையில் நடைபெற்ற பிரச்சார யாத்திரை சுமார் 33 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை பயணித்து நேற்று திருமலையில் நிறைவடைந்தது.

ஆந்திரா, தெலங்கானாவில் வேற்று மதத்தவரின் மத மாற்ற பிரச்சாரங்களை நம்பி மதம் மாற வேண்டாம் என பழங்குடியினர், தலித்துகள் வசிக்கும் பகுதிகளில்தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. இதில் இப்பிரிவை சேர்ந்த 1,200 பேர் பங்கேற்றனர். 25 பேருந்துகளில் பயணம் செய்த இவர்களின் இந்து தர்ம பிரச்சார யாத்திரை திருப்பதி வந்தடைந்தது.

பின்னர், இவர்கள் திருமலைக்கு மலைப்பாதை வழியாக நடந்தே திருமலை வந்தடைந்தனர். அனைவரும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானத்தினர் ஏற்பாடு செய்தனர். சாரதா பீடத்தின் இளம் பீடாதிபதி தலைமையில் 1,200 பேரும் நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்தனர்.

"வாழ்க்கையில் சுவாமியை தரிசனம் செய்வோம் என நினைத்துகூட பார்க்கவில்லை. இதற்கு ஏற்பாடு செய்த சாரதா பீடத்துக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என அவர்கள் கூறினர்.

"இந்து மதத்தினரை வேற்று மதங்களுக்கு மாற்றுவதை தடுக்கவே தர்ம யாத்திரையை நடத்தினோம். இது போன்ற யாத்திரைகள் தொடரும்" என இளம் பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்திரா திருமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x