Last Updated : 31 Mar, 2021 01:16 PM

 

Published : 31 Mar 2021 01:16 PM
Last Updated : 31 Mar 2021 01:16 PM

மன்னிப்பு கோரினார் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி. ஜார்ஜ்: ராகுல் காந்தி குறித்த பாலியல் ரீதியான விமர்சனங்களைத் திரும்பப் பெற்றார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: கோப்புப் படம்.

கொச்சி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து பாலியல் ரீதியாக அவதூறாகப் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ் தனது பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரி, தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

கடந்த வாரம் ராகுல் காந்தி, கொச்சியில் உள்ள புகழ்பெற்ற தெரஸா மகளிர் கல்லூரிக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார். அங்குள்ள மாணவிகள் கோரிக்கையை ஏற்றுத் தான் பயின்ற அகிடோ கலையைக் கற்றுக்கொடுத்தார்.

இடுக்கி மாவட்டம் இரட்டையார் பகுதியில் மின்துறை அமைச்சர் மாணிக்கு ஆதரவாக ஜாய்ஸ் ஜார்ஜ் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தி ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார்.

பெண்களுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுக்கிறேன் என்று கூறி நேராக நில்லுங்கள், குனிந்து, வளைந்து நில்லுங்கள் என்று பெண்கள் அருகே ராகுல் செல்கிறார். பெண்கள் அருகே ராகுல் காந்தி செல்லக்கூடாது.

இதுபோன்று செய்யக்கூடாது. ராகுல் காந்தியுடன் பேசும்போது பெண்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர்" எனத் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் ஜார்ஜ் பேசிய காட்சி

ஜாய்ஸ் ஜார்ஜின் பேச்சுக்குக் கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடும் கண்டனம் தெரிவித்து, ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மாநிலத்தின் பல இடங்களில் ஜாய்ஸ் ஜார்ஜின் உருவ பொம்மைகளை காங்கிரஸ் கட்சியினர் எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி.ஜாய்ஸ் ஜார்ஸ் நேற்று வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். ராகுல் காந்தி குறித்துத் தான் பேசிய வார்த்தைகளையும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜாய்ஸ் ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், "இரட்டையார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து நான் பேசிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். நான் பேசிய வார்த்தைகளையும் திரும்பப் பெறுகிறேன்" எனத் தெரிவித்தார்.

ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய கருத்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கருத்தும் கூற மறுத்துவிட்டது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டபோது, "நாங்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிர்ப்பு தெரிவிப்போம். தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x