Published : 30 Mar 2021 04:02 PM
Last Updated : 30 Mar 2021 04:02 PM

மகாராஷ்டிராவில் மீண்டும் லாக்டவுன்? - உத்தவ் தாக்கரேவுக்கு ஆனந்த் மகேந்திரா உருக்கமான பதிவு

மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில்
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனந்த் மகேந்திரா


இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் எந்த அளவிற்கு அதனை அமல் செய்வது என்பது குறித்து முதல்வர் தாக்கரே கேட்டறிந்தார். பல மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் பயன் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. இதனால் மகாராஷ்டிராவில் எப்போது வேண்டுமானாலும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பதில் கூறுகையில் ‘‘லாக்டவுனால் மக்களை குறிப்பாக ஏழைகளை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சிறிய தொழில் செய்பவர்களை காயப்படுத்தும்.

உண்மையிலேயே பெருந்தொற்று போன்றவை ஏற்படும்போது மருத்துவமனை அமைத்தல், அதற்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற சூழ்நிலையில் தான் லாக்டவுன் தேவைப்படும். எனவே கரோனா தொற்றில் இருந்து மீண்டெழுவதிலும், உயிர் பலி நேராமல் பாதுகாப்பதிலும் நாம் இனிமேல் கவனம் செலுத்துவோம். ’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x