Published : 29 Mar 2021 04:27 PM
Last Updated : 29 Mar 2021 04:27 PM

பேகம் மம்தா பானர்ஜிக்கு வாக்களித்தால் மேற்குவங்கம் பாகிஸ்தானாக மாறி விடும்: சுவேந்து அதிகாரி கடும் சாடல்

பேகம் மம்தா பானர்ஜிக்கு வாக்களித்தால் மேற்குவங்கம் பாகிஸ்தானாக மாறி விடும் என நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி கூறினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன. இதில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார். பிரச்சாரத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் அங்கு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜியும், சுவேந்து அதிகாரியும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி பேசியதாவது:

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈத் முபாக் என்று கூறுவார். ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில் ஹோலி முபாரக் என்று வாழ்த்து கூறுகிறார்.
மம்தா பானர்ஜிக்கு வாக்களித்தால் மேற்குவங்கம் பாகிஸ்தானாக மாறி விடும்.

முஸ்லிம்களை திருப்திபடுத்தும் அரசியலையே அவர் தொடர்ந்து செய்து வருகிறார். எனவே மக்கள் பேகம் மம்தா பானர்ஜிக்கு வாக்களிக்காதீர்கள்.

மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் மிகச்சிறந்த ஆட்சியை வழங்குவோம். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் எவ்வாறு சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறாரோ அதேபோன்ற ஆட்சியை மேற்குவங்கத்தில் வழங்குவோம்.

இவ்வாறு சுவேந்து அதிகாரி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x