Published : 29 Mar 2021 01:08 PM
Last Updated : 29 Mar 2021 01:08 PM

சரத் பவாருக்கு உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் அனுமதி: நாளை மறுதினம் அறுவை சிகிச்சை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை மறுதினம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. அதில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதும் அதனால் வலி ஏற்பட்டதும் உறுதிப்படுத்தபட்டது.

இதனையடுத்து அவருக்கு நாளை மறுதினம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன் பிறகும் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உள்ளது. சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் ‘‘சரத் பவாருக்கு பித்தப்பையில் பாதிப்புள்ளது. புதன் கிழமை அறுவை சிகிச்சை நடைபெறும்’’ எனக் கூறியுள்ளார். சரத் பவார் ஏற்கெனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம் வீர் சிங், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரி பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மகாராஷ்டிர அரசுக்கும், அம்மாநில உள்துறை அமைச்சரான அனில் தேஷ் முக் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல் படேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கெளதம் அதானியின் விருந்தினர் மாளிகையில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

குஜராத்தை சேர்ந்த சில ஊடகங்கள் இந்த செய்தியை பெரிய அளவில் வெளியிட்டன. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் சரத் பவார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி 5 மாநில தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சரத் பவார் திட்டமிட்டு இருந்தார். தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x