Last Updated : 29 Mar, 2021 11:05 AM

 

Published : 29 Mar 2021 11:05 AM
Last Updated : 29 Mar 2021 11:05 AM

கான்பூர் காவல் நிலையத்தில் காணாமல்போன 1400 பெட்டி மது பாட்டில்கள்: எலிகளைக் காரணமாக சொன்ன போலீஸார் மீது வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரக் காவல் நிலையத்தில் மது பாட்டில்கள் அடங்கிய 1,400 பெட்டிகள் மாயமாகி உள்ளன. இவற்றை எலிகள் நாசம் செய்து விட்டதாகக் கூறிய இரண்டு போலீஸார் மீது வழக்குப் பதிவாகி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மது போன்ற பொருட்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படுவது வழக்கம். இவை நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு உரியவர் அல்லது அரசுக் கருவூலங்களில் ஒப்படைக்கப்படுவது உண்டு.

அதுவரை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அவை பாதுகாத்து வைக்கப்படுகின்றன. அந்த வகையில் கான்பூர் நகரக் காவல் நிலையத்திலும் மது பாட்டில்கள் பல பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றின் எண்ணிக்கையை திடீரெனச் சோதனை செய்தபோது அவற்றில் 1,400 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்கள் மாயமானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதன் பொறுப்பாளர்களைக் கேட்டபோது அவற்றை எலிகள் சேதப்படுத்தி விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதை நம்பாத போலீஸார், அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் இந்திரேஷ்பால் சிங் மற்றும் எழுத்தரான ரிஷால்சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

சில காவல் நிலையங்களில் பொருட்களைக் காணாமல் போகச் செய்து அவை சேதமடைந்ததாகக் கணக்கு காட்டப்படுவது உண்டு. மிகச் சிறிய எண்ணிக்கையிலான பொருட்கள் காணாமல் போனால் எலிகள் காரணமாகக் காட்டப்படுவதும் வழக்கமே.

தற்போது காணாமல் போன மது பாட்டில்களின் எண்ணிக்கை பல ஆயிரம் ஆகும். இதனால், சிறிதும் நம்ப முடியாத இந்தத் தகவல், உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x