Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

முகநூலில் செல்பி வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்ய முயன்ற ஓட்டல் உரிமையாளரை காப்பாற்றிய நண்பர்கள்

அனந்தபூர்

ஆந்திராவின், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் (35). இவர் கிருஷ்ணா மாவட்டம், ஜக்கைய்யா பேட்டையில் உள்ள ஓட்டலில் பணியாற்றினார். ஓய்வுநேரத்தில் அண்ணபூர்னா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அப்போது சிலர் அவருக்கு நண்பர்களாயினர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஓட்டல் மூடப்பட்டதால், சொந்த ஊரான அனந்தபூருக்கு சதீஷ் திரும்பினார். கையிருப்பு பணத்தை கொண்டு சிறிய ஓட்டலை தொடங்கினார். அதில் அதிக அளவில் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். மனமுடைந்த சதீஷ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

கார்ல திண்ணா எனும் பகுதியில் நடந்து சென்று கொண்டே முகநூலில் செல்பி வீடியோவை வெளியிட்டார். "வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் "என கூறிவிட்டு, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டார்.

சுமார் 250 கி.மீ. தொலைவில் கிருஷ்ணா மாவட்டம், ஜக்கைய்யா பேட்டையில் வசிக்கும் சதீஷின் நண்பர்கள் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து அனந்தபூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். செல்போன் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்த போலீஸார் சம்பவ பகுதிக்கு வாகனத்தில் சென்றனர்.

விரைவு ரயில் வருவதற்கு முன்பாக விரைந்து சென்ற போலீஸார், தண்டவாளத்தில் படுத்திருந்த சதீஷைகடைசி நிமிடத்தில் காப்பாற்றினர். "வாழ்க்கையில் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். கடன்களை திருப்பிஅடைத்துவிடலாம். அதற்கு காலஅவகாசம் வாங்கி தருகிறோம்" என்று அறிவுரைகளை கூறிய போலீஸார், அவரை வீட்டில் கொண்டு போய் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x