Published : 28 Mar 2021 01:29 PM
Last Updated : 28 Mar 2021 01:29 PM

குஜராத்தில் ஐஐஎம், ஐஐடியில் கரோனா பரவல்: 65 பேருக்கு தொற்று

அகமதாபாத்

அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமான ஐஐஎம்மில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில்
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

குஜராத் மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அகமதாபாத் நகரில் கரோனா வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அகமதாபாத் மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன்படி, அகமதாபாத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான விலங்கியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர்நிலை சுற்றுலா தலங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அதேபோல இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமான ஐஐஎம்மில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்த அவரதுடன் தங்கியிருந்த மாணவர்கள், பயிலும் மாணவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. வகுப்பெடுத்த போராசியர்களுக்கும் தொடர்ந்து கரோனா பரிசோதனை நடந்தது. மொத்தமாக 40 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். விடுதியும் மூடப்பட்டது.

அதுபோலவே காந்திநகரில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் பயிலும் 25 மாணவர்கள், பேராசியர்களுக்கும் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படவில்லை.

அனைவரும் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் கரோனா தொற்று உள்ளவ மாணவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x