

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்த் (75), முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தவர். தற்போது ஷாஜகான்பூரில் சட்டக்கல்லூரி நடத்தி வருகிறார்.
கல்லூரியில் பயின்று வரும் 23 வயது மாணவிக்கு சுவாமி சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதனிடையே, தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டதாக சுவாமி சின்மயானந்த் சார்பில் காவல் நிலையத்தில் மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அந்த மாணவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ‘‘பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை போலீஸார் சமர்ப்பிக்கவில்லை. மாணவி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள் இல்லை. ஆதலால், அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே. ராய் நேற்று தீர்ப்பளித்தார்.