Published : 27 Mar 2021 01:45 PM
Last Updated : 27 Mar 2021 01:45 PM

மாநிலம் முழுவதும் நாளை முதல் காலவரையின்றி இரவு ஊரடங்கு; மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மும்பை

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை காலவரையற்ற இரவு ஊரடங்கை அமல்படுத்தி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் எந்த அளவிற்கு அதனை அமல் செய்வது என்பது குறித்து முதல்வர் தாக்கரே கேட்டறிந்தார். பல மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் பயன் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. இதுபோலவே கரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை காலவரையற்ற இரவு ஊரடங்கை அமல்படுத்தி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் தெரிவிக்கையில் ‘‘மாநிலம் முழுவதும் இரவு 8மணி முதல் காலை7மணி வரை வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், மால்கள் இயங்காது. மருந்து கடைகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இருக்கும். விழா, பண்டிகைகளின் போது கூடுவோர் சமூக இடைவெளியை கடைபிடித்து தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x