அசாமின் அமைதி, வளர்ச்சிக்காக வாக்களியுங்கள் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
Updated on
1 min read

அசாமின் அமைதி, வளர்ச்சிக்காக வாக்களியுங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப் படுகிறது. இதில் முதல்கட்டமாக 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதையொட்டி முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

அசாம் மாநிலம் எனது 2-வது வீடு ஆகும். 5 ஆண்டுகள் நிதியமைச்சராகவும் 10 ஆண்டுகள் பிரதமராகவும் நான் பணியாற்ற அசாம் மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர்.

அசாமில் நீண்ட காலமாக தீவிரவாத பிரச்சினை நீடித்து வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் 2001-2016 ஆட்சிக் காலத்தில் அசாமில் புதிய அத்தியாயம் தொடங்கியது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்தது.

ஆனால் இப்போது மதம், இனம், மொழிரீதியாக மக்களிடையே பிரிவினை தூண்டப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது. அவசரகதியில் அமல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

கரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் ஏழைகள், மேலும் ஏழைகளாகி உள்ளனர். இந்த நேரத்தில் அசாமின் அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்து சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அசாமில் தற்போது முதல்வர் சர்வானந்த சோனாவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in