Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM
என்னை பலிகடா ஆக்குகின்றனர் என்று மும்பை நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் வீடு மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அவரது வீட்டின் முன்பு கேட்பாரற்று நின்ற காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கார், மகாராஷ்டிராவின் தாணே பகுதியை சேர்ந்த வர்த்தகர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது என்பது விசார ணையில் தெரியவந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு கார் காணாமல் போய்விட்டதாக அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்தார். திடீர் திருப்பமாக மார்ச் 5-ம் தேதி மான்சுக் ஹிரனின் உடல், நீரோடை யில் மீட்கப்பட்டது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இதுதொடர் பாக மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் கைது செய்யப் பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் அவரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது காவல் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சச்சின் வாஸ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கூறும்போது, "வழக்குக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக என்னை பலிகடா ஆக்குகின்றனர்" என்று தெரிவித்தார்.
என்ஐஏ சார்பில் கூறும்போது, "சச்சின் வாஸின் வீட்டில் இருந்து 62 பெட்டி துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்கில் அவருக்கு நெருங்கிய தொடர்பிருப்பது உறுதியாகி உள்ளது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும். எனவே மேலும் 15 நாட்கள் காவலில் சச்சின் வாஸை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வரும் ஏப்ரல் 3-ம் தேதி வரை சச்சின் வாஸை விசாரிக்க என்ஐஏ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT