

பிரதமர் நரேந்திர மோடி பொய் பேசுகிறார் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் வரும் 27-ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தின் விஷ்ணுபூரில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
பிரதமர் பதவியை மிகவும் மதிக்கிறேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி போன்று பொய் பேசும் பிரதமரை பார்த்தது கிடையாது. அவர் பொய்களை மட்டுமே கூறுகிறார். மேற்குவங்கத்துக்குள் சமூக விரோதிகளை பாஜகவினர் அழைத்து வந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை அழிக்கஅந்த கட்சி முயற்சி செய்கிறது.
உத்தர பிரதேசத்தில் பாஜகவினரின் துன்புறுத்தலால் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். டெல்லியில் கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை அலட்சியப்படுத்தி வருகிறது.
நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் அதானி ஆகியோர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அனைத்து வளம், பணத்தையும் அதாடி கொள்ளையடித்துவருகிறார். இனிமேல் மோடி, அமித் ஷா, அதானி ஆகியோர் மட்டும் செழித்து வாழ்வார்கள். மக்களுக்கு கண்ணீர் மட்டுமே மிஞ்சும்.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை.ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அந்தபணம் எங்கே? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்து திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.