Published : 25 Nov 2015 09:38 AM
Last Updated : 25 Nov 2015 09:38 AM
பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி செல்வந்தர்களுக் காகவே பாடுபடுகிறார் என்று சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி சார்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாநாடு நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் பங்கேற்று பேசியதாவது:
சமாஜ்வாதி ஆட்சியில் இருந்த போது 17 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை எஸ்சி பட்டியலில் இணைத்தோம். ஆனால் மாயாவதி முதல்வராக பதவியேற்றதும் அதை ரத்து செய்தார். இது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட போது, மத்திய அரசுக்கு மாயாவதி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதால் இந்த விவாரத்தில் தன்னால் எதையும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார்.
வெளியுலகுக்கு தலித் மக்களின் தோழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மாயாவதியின் உண்மையான முகம் இது தான். அவர் செல்வந்தர்களுக்காக மட்டுமே பாடுபடுகிறார். தலித் மக்களின் நலனில் அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எஸ்சி பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முதல்வர் அகிலேஷ் யாதவ்விடம் முறையிடுவேன்.
அடுத்த ஆண்டு உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் வரவுள்ளது. கட்சித் தொண்டர்கள் சட்டப்பேரவை தேர்தலை மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டும் உழைக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தால் தான் மாநிலத்துக்கு நன்மை ஏற்படும். மாநில அரசு என்பது மாவட்ட வருவாய் அதிகாரி பதவி போன்றது.
மத்திய அரசு என்பது மாவட்ட ஆட்சியர் பதவி போன்றது. எனவே உத்தரவிடும் பதவியிலும், உத்தரவை செயல்படுத்தும் பதவியிலும் சமாஜ்வாதி அமர கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT