Last Updated : 23 Mar, 2021 04:42 PM

 

Published : 23 Mar 2021 04:42 PM
Last Updated : 23 Mar 2021 04:42 PM

45 வயதுக்கு மேற்பட்டோர் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம்; சான்றிதழ் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போர், இல்லாதோர் அனைவரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

2-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் இணை நோய்கள் இருந்தாலும் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தும், சீரம் மருந்து நிறுவனத்துடன் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்பின் 2-வது கட்ட தடுப்பூசி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைநோய்கள் இருப்போர் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அரசு கேட்டுக்கொண்டது.

அரசு மருத்துவமனைகளிலும், தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இணை நோய்கள் இருப்போர் மற்றும் இல்லாதோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தலாம். 2-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தும்போது, இணை நோய்கள் இருந்தால் மருத்துவரிடம் சான்று பெற்று வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தச் சான்றும் பெறத் தேவையில்லை.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருதையடுத்து, தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, அறிவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பின், மத்திய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட பின் 2-வது டோஸ் செலுத்தும் காலம் 28 நாட்களில் இருந்து 8 வாரங்களுக்குப் பின் செலுத்த வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மருந்தின் செயல்திறனை அதிகப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை 4.85 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஏராளமானோர் 2-வது டோஸ் மருந்தும் செலுத்தியுள்ளனர். 32.5 லட்சம் டோஸ் மருந்துகள் நேற்று செலுத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 3.77 லட்சம் பேர் நாள்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மார்ச் மாதம் நாள்தோறும் 15 லட்சமாக உயர்த்தியுள்ளோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்ட் இரு மருந்துகளும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. பிரதமர் மோடிகூட கோவாக்ஸின் தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டார். ஆதலால், எந்தத் தடுப்பு மருந்தையும் தகுதியான வயதினர் எடுக்கலாம். இரு மருந்துகளுக்கு இடையே இடைவெளி எத்தனை நாட்கள் என்பது மருத்துவரின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும்''.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x