Last Updated : 23 Mar, 2021 02:15 PM

 

Published : 23 Mar 2021 02:15 PM
Last Updated : 23 Mar 2021 02:15 PM

கேரள போலீஸார்-அமலாக்கப் பிரிவு மோதல்: அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவலர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கம் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் மீது அவதூறு பரப்ப அமலாக்கப் பிரிவு திட்டமிட்டதாகக் கூறி கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கேரள போலீஸார் செயல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு பிரதான குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்க அமலாக்கப் பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஆடியோ ஒன்று கசிந்தது.

அதுமட்டுமல்லாமல் ஸ்வப்னா சுரேஷுடன் காவலுக்குச் சென்ற இரு பெண் போலீஸார் கூறுகையில், "அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷை விசாரித்தபோது, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கூற வலியுறுத்தினர்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்து கேரள போலீஸார், முதல்வர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தங்கம் கடத்தல் வழக்கில் அமலாக்கப் பிரிவுக்கும், கேரள போலீஸாருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், "கேரள போலீஸாரின் வழக்கை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த கேரள போலீஸாரின் செயல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் உள்ள சதித் திட்டத்தைக் கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x