Last Updated : 22 Mar, 2021 04:46 PM

 

Published : 22 Mar 2021 04:46 PM
Last Updated : 22 Mar 2021 04:46 PM

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 79 சதவீதமாக உயர்த்தும் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப் படம்.

புதுடெல்லி

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தும் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேறியது.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த அறிவிப்பில், காப்பீட்டுத் துறையில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இதன்படி காப்பீட்டுத் துறையில் திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 18-ம் தேதி மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இருப்பினும் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 79 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.

அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், "காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை அதிகரிக்கும்போது, காப்பீடுதாரர்களுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். நிதிப் பிரச்சினைகள் தீரும். பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும். அதே நேரத்தில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டைத் திரட்டிக் கொள்ள முடியும்.

ஏனென்றால், பல்வேறு காப்பீடு நிறுவனங்கள் திவால் நிலையை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, முதலீட்டை அதிகரித்துக் கொள்ளும், கடன் பிரச்சினையிலிருந்து மீளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனா சூழலில் காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சிக்கல் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்தும் முடிவு என்பது, காப்பீடு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரையின்படியும், அனைத்துத் தரப்பினருடனும் ஆழ்ந்த விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்புதான் எடுக்கப்பட்டது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக 2015-ம் ஆண்டு முதல் முறையாக வந்த மோடி ஆட்சியில் அனுமதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை ரூ.2,500 கோடி முதலீடு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்குப் பின் இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x