Published : 22 Mar 2021 01:09 PM
Last Updated : 22 Mar 2021 01:09 PM

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி செய்தால் அந்தத் தீயில் நீங்களே எரிந்து போவீர்கள்: பாஜக கூட்டணிக்கு சிவசேனா எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறு செய்தால் அந்த தீயில் நீங்களே எரிந்து போவீர்கள் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏ-வும் விசாரித்து வருகின்றன. இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18-ம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சூழ்நிலையில், பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 8 பக்கங்களைக் கொண்ட அதில், “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக் கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என கூறப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரி பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசபோலவே மகாராஷ்டிர அரசை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி வருகிறார். இதுபோல மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவரும் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சஞ்சய் ராவத்

இதற்கு ஆளும் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய புலனாய்வு அமைப்பை ஏவி மாநில அரசுக்கு எதிரான செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மாகராஷ்டிர அரசுக்கு எதிராக செயல்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம். மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி செய்தால் அந்த தீயில் நீங்களே எரிந்து போவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x