Published : 22 Mar 2021 11:56 AM
Last Updated : 22 Mar 2021 11:56 AM

உலக தண்ணீர் தினம் இன்று:  மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை  பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி

உலக தண்ணீர் தினமான இன்று மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சரும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமர் முன்னிலையில் கையெழுத்திடுவார்கள்

‘‘மழை நீர் சேகரிப்பு , மழை எங்கு பொழிந்தாலும், எப்போது பொழிந்தாலும்,” என்ற கருப்பொருளோடு நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பருவமழைக்கு முந்தைய காலத்திலும், பருவமழை காலத்திலும் அதாவது 2021 மார்ச் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இது அமல்படுத்தப்படும்.

தண்ணீரின் பாதுகாப்பை முன்னிறுத்தி மக்களின் பங்களிப்போடு அடிமட்ட அளவில் மக்கள் இயக்கமாக இந்தப் பிரச்சாரம் செயல்படுத்தப்படும்.

மழைநீர் முறையாக சேமிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக பருவநிலை மாற்றங்கள், மண் அடுக்குகளுக்கு ஏற்றவாறு மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தண்ணீர் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள (தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர்த்து) அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பிற்கான ‘நீர் உறுதிமொழியையும்’ கிராம சபைகள் ஏற்கும்.

நதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீர் வரத்து அபரிமிதமாக உள்ள பகுதிகளில் இருந்து வறட்சி மிகுந்த மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீரை எடுத்துச் செல்லும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையை அமல்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் துவக்கமாக இந்த ஒப்பந்தம் அமையும்.

இந்த திட்டத்தின் கீழ் தௌதன் அணை, கென் மற்றும் பெத்வா ஆறுகளை இணைக்கும் கால்வாய், லோயர் ஆர் திட்டம், கோத்தா குறுக்கணை மற்றும் பீனா வளாகம் பல்நோக்கு திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டு அதன்மூலம் கென் ஆற்றில் உள்ள நீர் பெத்வா ஆற்றிற்கு கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் ஆண்டுக்கு 10.62 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம், 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் 103 மெகாவாட் நீர் மின்சக்தி உருவாக்கப்படும்.

தண்ணீர் பஞ்சம் அதிகம் உள்ள பந்தல்கண்ட் பகுதி குறிப்பாக மத்தியப் பிரதேசத்தின் பன்னா, டிகாம்கர், சத்தர்புர், சாகர், தாமோ, தாட்டியா, விதிஷா, ஷிவ்புரி, ரெய்சன் ஆகிய மாவட்டங்களும், உத்தரபிரதேசத்தின் பண்டா, மகோபா, ஜான்சி மற்றும் லலித்புர் ஆகிய மாவட்டங்களும் இந்தத் திட்டத்தின் வாயிலாக பெரிதும் பயனடையும்.

நாட்டின் வளர்ச்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக மேலும் பல நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு இது வழிவகை செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x