

பள்ளிப் படிப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று மேற்கு வங்கத்துக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்குவரும் 27-ம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
மேற்குவங்கத்தில் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தலில்பரபரப்பான போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் அங்கு பாஜககளம் இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண்கள் பாதுகாப்பு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, சிறப்பான மருத்துவ வசதி, புதிய தொழிற்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும் தொடக்கக் கல்வி முதல் பட்டமேற்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு இலவசக்கல்வித் திட்டத்தை முன்னெடுப்போம்.
ஒருகாலத்தில் நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியில் 30 சதவீத பங்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.
தற்போது 3.5 சதவீத தொழில் உற்பத்தி மட்டுமே இங்கு உள்ளது. மேற்கு வங்கத்தை ஆண்ட அரசுகள் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரவில்லை. கடந்த 73 ஆண்டுகளாக இந்த நிலைதான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.