Last Updated : 21 Mar, 2021 03:44 PM

 

Published : 21 Mar 2021 03:44 PM
Last Updated : 21 Mar 2021 03:44 PM

பாஜக தொண்டர்களை கொலை செய்த திரிணமூல் குண்டர்கள் நரகத்தில் ஒளிந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்: அமித் ஷா உறுதி

கிழக்கு மிட்னாபூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

கிழக்கு மிட்னாப்பூர்

130 பாஜக தொண்டர்களை கொலை செய்த திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் நரகத்தில் ஒளிந்திருந்தாலும், கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. இரு கட்சிகளுக்கும்தான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கிழக்கு மிட்னாப்பூர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்கள், மண் என்று மம்தா பேசுகிறாரே ஏதாவது மாற்றம் வந்ததா. ஊடுருவல்காரர்கள் இதற்கு முன்பும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். ஊருடுவல்காரர்களிடம் இருந்து விடுதலை பெற விரும்புகிறீர்களா. ஊடுருவல்காரர்களிடம் இருந்து உங்களுக்கு மம்தாவால் விடுதலை பெற்றுக் கொடுக்க முடிந்ததா. நாங்கள் செய்கிறோம்.

பாஜகவுக்கு வாக்களியுங்கள், 5 ஆண்டுகளில் ஊடுருவல்காரர்களிடம் இருந்து மேற்கு வங்கத்தை சுதந்திரம் பெறச் செய்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தபின், நீங்கள் சரஸ்வதி பூஜை, துர்கா பூஜை செய்வதை யாராலும் தடுக்க முடியாது.

திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களுக்கு இது கடினமான நேரம். மக்கள் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று நான் உறுதியளிக்கிறேன். ஆதலால், யாருக்கும் அஞ்சாதீர்கள். திரிணமூல் குண்டர்களால் நீங்கள் வாக்களிப்பதை தடுக்க முடியாது.

மேற்கு வங்கத்தில் 130 பாஜக தொண்டர்கள் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். பாஜக மே.2-ம் தேதி ஆட்சிக்கு வந்தபின், திரிணமூல் குண்டர்கள் நரகத்தில் மறைந்திருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும், அவர்கள் தப்பிக்கமாட்டார்கள்.

ஏராளமான கமிஷன் தொகை மம்தாவின் உறவினர் மூலம் எடுக்கப்பட்டு அது மீண்டும் மம்தாவுக்கே வந்து சேர்கிறது. இதை தடுக்க வேண்டாமா. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழல் நிறைந்த அரசு. ரூ.500 கொடுத்தால் என்ன பிரச்சினை என்கிறார் மம்தா. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணம் கமிஷனாகச் செல்லாது.

மம்தா பானர்ஜி தனது உறவினரை முதல்வராக்க முயல்கிறார், ஆனால், பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தை தங்க வங்காளமாக மாற்ற நினைக்கிறார். மீனவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நேரடி பணஉதவித் திட்டமும், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டமும் கிடைக்கும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x