Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கார்- கரோனா பாதுகாப்பு உடையில் நடக்க வைத்து போலீஸ் அதிகாரி சச்சின் வாஸிடம் விசாரணை

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பைவீட்டின் முன்பு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெடிபொருட்களுடன் ஸ்கார்பியோ கார் நிறுத்தப் பட்டிருந்தது. அந்த காரில் மிரட்டல் கடிதமும் இருந்தது.

இதுகுறித்து மும்பை போலீ ஸார் விசாரணை நடத்தினர். அதில்,அந்த கார் தாணே பகுதியை சேர்ந்த வர்த்தகர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு கார் காணாமல் போய்விட்டதாக அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்தார். திடீர் திருப்பமாக கடந்த 5-ம் தேதி மான்சுக் ஹிரனின் உடல், தாணேவில் உள்ள ஒரு நீரோடையில் மீட்கப்பட்டது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தற்போது விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில் மான்சுக் ஹிரனின் நண்பரும், மும்பை போலீஸ் அதிகாரியுமான சச்சின் வாஸுக்கு வழக்கில் நெருங்கிய தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சி

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முகேஷ் அம்பானி வீடு அருகேயுள்ள சாலையில் உள்ள சிசிடிவி காட்சியில் கரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்த மர்ம நபர் நடந்து செல்வது பதிவாகி உள்ளது. அந்த நபர் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்று என்ஐஏ சந்தேகிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு சச்சின் வாஸுக்கு கரோனா பாதுகாப்பு கவச உடையை அணிவித்து அதே பகுதியில் நடந்து வரச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சச்சின் வாஸை மீண்டும் அதே பாணியில் நடக்க செய்து விசாரணை நடத்தப் பட்டது.

வழக்கின் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. போலீஸ் அதிகாரி சச்சின் வாஸிடம் முறையாக விசாரணை நடத்தினால் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

மாதம் ரூ.100 கோடி வசூல்

இந்த வழக்கு விவகாரத்தால் மும்பை போலீஸ் கமிஷனர் பரம் வீர் சிங் அண்மையில் இட மாற்றம் செய்யப்பட்டார். அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

"அமைச்சர் அனில் தேஷ் முக்குக்கும் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மாதந்தோறும் ரூ.100 கோடியை வசூல் செய்து கொடுக்க வேண்டும் என்று சச்சின் வாஸுக்கு அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களில் அமைச்சரை, சச்சின் வாஸ் பலமுறை சந்தித்துப் பேசியி ருக்கிறார்" என்று பரம்வீர் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x