Published : 28 Jun 2014 01:07 PM
Last Updated : 28 Jun 2014 01:07 PM

படகில் சென்றவரைத் தாக்கி வனத்துக்குள் தூக்கிச் சென்ற புலி: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்க மாநிலம் சுந்தரவனக் காடுகளில் சில பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் மீன், நண்டு உள்ளிட்டவற்றைப் பிடித்து வருகின்றனர். இது எவ்வளவு அபாயகரமானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

படகில் சென்ற 62 வயது முதியவரை மின்னல் வேகத்தில் தாக்கிய புலி, அவரைக் கழுத்தோடு கவ்வியபடி வனத்துக்குள் தூக்கிச் சென்றுவிட்டது. உடன் சென்றவர்கள் என்ன நடக்கிறது என்பதை முழுவதுமாக உணர்வதற்குள் இச்செயல் நடந்து முடிந்து விட்டது.

மேற்குவங்க மாநிலம் தத்தா நதிக்கரையிலுள்ள லாகிரிபூரில் வசித்து வந்தவர் சுஷில் மஜி(62). சுஷில் மஜி, அவரது மகன் ஜோதிஷ் (40), வளர்ப்பு மகள் மொலினா ஆகியோர் கடந்த வியாழக்கிழமை கோலாகாலி வனப்பகுதிக்குள் நண்டு பிடிக்க படகில் சென்றனர். இப்பகுதியில் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜோதிஷ் படகின் முன்பகுதியிலும், சுஷீல் படகின் மத்தியிலும், மொலினா படகின் பின்பகுதியிலும் அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக ஜோதிஷ் கூறியதாவது:

காலை 7 மணிக்கு ஓரிடத்தை அடைந்தோம். விநோதமான வாசனை வரவே, அங்கிருந்து உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குத் திரும்ப முடிவு செய்தோம். அடர்த்தி குறைவான வனப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது, என் சகோதரி ‘புலி’ எனக் கத்தினார். நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். நான் பார்த்ததெல்லாம் மஞ்சள் நிற மின்னலொன்று படகில் பாய்ந்ததைத்தான். என்ன நடக்கிறது என்பதை உணரவே எனக்கு சில நொடிகள் ஆயின. என் தந்தை புலிக்குக் கீழே சிக்கியிருந்தார். அவரின் கால்கள் மட்டுமே தெரிந்தன.

நான் சுய உணர்வுக்குத் திரும்பி, கையில் குச்சியை எடுத்துக் கொண்டேன். காட்டில் புதர்களை ஒதுக்கி வெட்டுவதற்கான கத்தியை என் தங்கை எடுத்துக் கொண்டார். இருவரும் புலியைத் தாக்கத் தொடங்கினோம். ஆனால், அதனால் பயனில்லை. புலி, தனது இரையைக் கொல்வதிலேயே குறியாக இருந்தது.

என் தந்தையின் கழுத்தைக் கவ்வித் தூக்கிய புலி, சரேலென தரையில் தாவிக் குதித்து விட்டது. மிக நீண்ட தூரம் தாவிய அந்தப் புலி என் தந்தையை வாயில் கவ்வியபடியே வனத்துக்குள் வேகமாகச் சென்று விட்டது” என்றார்.

ஜோதிஷும் மொலினாவும் அபயக்குரல் எழுப்பியதால், அருகே மீன்பிடித்துக் கொண் டிருந்தவர்கள் வேகமாக அங்கு வந்தனர்.

ஆனால், யாருக்கும் புலியைப் பின்தொடர்ந்து செல்லத் துணிவில்லை. அச்சத்தில் மொலினா மயங்கி விழுந்து விட்டார். அந்த இடத்தை விட்டு அனைவரும் அகன்று விட்டனர்.

இதற்கு முந்தைய சம்பவங்களைப் போலவே, சுஷில் மஜியின் உடலும் கிடைக்கவேயில்லை. இந்த ஆண்டு மட்டும் இதேபோன்று 4 பேர் புலிகளால் கொல்லப்பட்டு, வனத்துக்குள் தூக்கிச் செல்லப்பட்டுள்ளனர்.

சுந்தரவன புலிகள் காப்பகத்தின், கள இயக்குநர் சவுமித்ரா தாஸ்குப்தா இத்தாக்குதலை உறுதி செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x