Published : 20 Mar 2021 12:04 PM
Last Updated : 20 Mar 2021 12:04 PM

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா திடீரென வேகமாக பரவுவது ஏன்?- மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடுமுழுவதும் கரோனா 2-ம் அலை பரவும் சூழல் இருப்பதால் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரோனா பரவலுக்கு முக்கிய காரணம் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்படாதது தான். மக்கள் அதிகமாக கூடும் சந்தை, பொதுப்போக்குவரத்து, மால்கள், சினிமா தியேட்டர்கள், உணவு விடுதிகள் என அனைத்திலும் மக்கள் முகவசம் இல்லாமல் நடமாடுகின்றனர்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கூடுகின்றனர். சமூக இடைவெளியின்றி நெருக்கமாக ஓரிடத்தில் குவிகின்றனர். குறிப்பாக பெருநகரங்களில் இது மிகவும் மோசமாக உள்ளது. இதனை தடுக்க வேண்டும். மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். தேவையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x