Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM

முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விவகாரம்- மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் திடீர் மாற்றம்

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் நின்றது தொடர்பான வழக்கில் மும்பை காவல் துறை அதிகாரி சச்சின் வாஸ் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார். இது மகாராஷ்டிரா அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்நிலையில் மும்பை காவல் ஆணையாராக ஹேமந்த் நாக்ரலே நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை காவல் ஆணையராக பரம்பிர் சிங் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக ஹேமந்த் நாக்ரலேவை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. பரம்பிர் சிங் ஊர் காவல்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஒரு மர்மக் கார்நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் காரினுள் வெடிக்கும் தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டது. காவல் துறை அதிகாரி சச்சின் வாஸ் இவ்வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் மனுசுக் ஹிரன் என்பவர்தான் அந்த மர்மக் காரின்உரிமையாளர் என்பது தெரியவந்தது. அவரது உடல மார்ச் 5-ம் தேதி மும்பையில் உள்ள ஆற்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

மனுசுக் ஹிரன் மரணத்தில் சச்சின் வாஸுக்கு தொடர்பு இருப்பதாக மனுசுக் ஹிரனின் மனைவி புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து என்ஐஏ அமைப்பு சச்சின் வாஸைக் கைது செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x