Published : 01 Nov 2015 05:42 PM
Last Updated : 01 Nov 2015 05:42 PM
நடப்பு வேளாண் பருவத்தில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி மூலம் 3.5 லட்சம் டன் பருப்பை இருப்பில் வைக்க மத்திய வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பரிந்துரை குறித்து, இதர அமைச்சகங்களிடம் கருத்து கோரியுள்ளது.
பருப்பு கிலோ ரூ.200 என்ற அளவில் எதிர்பாராத அளவுக்கு விலை உயர்ந்தது. பருப்பை கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சந்தையில் பருப்பு விலை உயர்ந்தால், அதனைக் கட்டுப்படுத்த இருப்பில் உள்ள பருப்பை விநியோகத்துக்கு திறந்து விட்டு, விலையுயர்வைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2015-2016-ம் சாகுபடி ஆண்டில் 3.5 லட்சம் டன் பருப்புகளை இருப்பு வைக்க மத்திய வேளாண் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அமைச்சரவைகளின் கருத்தை வேளாண் அமைச்சகம் கோரியுள்ளது.
இந்த 3.5 லட்சம் டன்னில், 1.5 லட்சம் டன் துவரை மற்றும் உளுந்து பருப்புகளை இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு காரிஃப் பருவ சந்தையில் இவை கொள்முதல் செய்யப்படும். எஞ்சிய 2 டன் கொண்டைக்கடலை மற்றும் மைசூர் (மசூர்) பருப்பாக ராபி பருவ சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும்.
இவை, உள்நாட்டு சந்தையிலோ அல்லது இறக்குமதி செய்யப்பட்டோ இருப்பு வைக்கப்படும். ஸ்திரமான விலை நிதி மற்றும், குறைந்தபட்ச ஆதார விலை நடவடிக்கைகளுக்கான நிதியிலிருந்து ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு இந்த கொள்முதல் நடைபெறும்.
சந்தை மற்றும், குறைந்தபட்ச ஆதார விலை இரண்டு வகையாகவும் பருப்புகள் கொள்முதல் செய்யப்படும்.
காரீப் பருவ சந்தை கடந்த மாதம் தொடங்கியுள்ளது., இந்திய உணவுக் கழகம் (எஃப்சி) ஒரு லட்சம் டன்னும், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை (நாபெட்), சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக கூட்டமைப்பு (எஸ்எஃப்ஏசி) ஆகியவை முறையே 40 ஆயிரம் டன் மற்றும் ஒரு லட்சம் டன் துவரை மற்றும் உளுந்து பருப்புகளை கொள்முதல் செய்யும்.
வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள ராபி பருவ சந்தையில் நாபெட் ஒரு லட்சம் டன் பருப்புகளையும், எஃப்சிஐ மற்றும் எஸ்எஃப்ஏசி ஆகியவை முறையே 90 ஆயிரம் டன், 10 ஆயிரன் டன் பருப்புகளை கொள்முதல் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT