Last Updated : 15 Mar, 2021 03:44 PM

 

Published : 15 Mar 2021 03:44 PM
Last Updated : 15 Mar 2021 03:44 PM

ஜின்னாவின் பாதையைப் பின்பற்றுகிறது காங்கிரஸ்; தேசத்தை அழித்துவிடும்: சிவராஜ் சிங் சவுகான் காட்டம்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்: கோப்புப் படம்.

நாகர்காட்டியா

காங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப் பின்பற்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தேசத்தை அழித்துவிடும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்தார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றத் தீவிரமாக முயன்று வருகிறது. அதேசமயம் இழந்த ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திப்ருகார்க் மாவட்டம், நாகர்காட்டியா நகரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் வழிகாட்டுதல்களை, பாதையை, கொள்கைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் முகமது அலி ஜின்னாவின் வழிகாட்டுதல்களை, போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். ஜின்னாவின் கொள்கைகள் அசாமை மட்டுமல்ல இந்தியாவையும் அழித்துவிடும்.

காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தில் ஏஐயுடிஎப் கட்சியுடனும், மேற்கு வங்கத்தில் ஐஎஸ்எப் கட்சியுடனும், கேரளாவில் ஐயுஎம்எல் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

ராகுல் காந்தியின் பேச்சுகள் நாட்டைத் துண்டாடும் விதத்தில் இருக்கின்றன. அசாம் மாநிலத்தில் அரசியல் செய்துகொண்டு வடக்கு, தெற்கு என்று ராகுல் பேசுகிறார். பழங்குடியினருக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்குகிறார்.

காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தை 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால், என்ன உங்களுக்குக் கொடுத்தது. முகலாய மன்னர்களால்கூட அசாமைத் தோற்கடிக்க முடியவில்லை. இங்கு லச்சித் போர்புஹான் எனும் ஹீரோ இருந்ததால் அது நடக்கவில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மூலம்தான் ஊடுருவல், வன்முறை, தீவிரவாதம், போராட்டம், பட்டினி, வேலையின்மை போன்றவை உருவாகின.

ராகுல் காந்தி,பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி வரலாற்றுப் பாடத்தில் மட்டும் இடம் பிடிக்கும். எதையும் சாதிக்க முடியாது''.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x