Last Updated : 14 Mar, 2021 04:52 PM

 

Published : 14 Mar 2021 04:52 PM
Last Updated : 14 Mar 2021 04:52 PM

அசாமைத் தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக தோல்வி அடையும்: சரத் பவார் ஆரூடம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் : கோப்புப்படம்

புனே

அசாம் மாநிலம் தவிர்த்து, தேர்தல் நடக்கும் மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக தோல்வி அடையும். நாட்டுக்கு புதிய வழிகாட்டுதலை அளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தலும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. மே2-ம் தேதி 5 மாநிலத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், புனே மாவட்டம், பாரமதி நகருக்கு இன்று சென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

5 மாநிலத் தேர்தலிலும் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று நான் பேசுவது தவறு. அந்தந்த மாநில மக்கள்தான் இதற்கான முடிவை எடுப்பார்கள். கேரள மாநிலத்தில் இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சிக்குத்தான் மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள் தேர்தலுக்குப்பின் திமுகதான் ஆட்சிவர வாய்ப்புள்ளது.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, மத்திய அரசு குறிப்பாக பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களுக்காகப் போராடிவரும் என்னுடைய சகோதரியை (மம்தா பானர்ஜி) தாக்க முயன்றுள்ளார்கள்.
ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநிலமும் முதல்வர் மம்தா பானர்ஜி பக்கம்தான் நிற்கிறார்கள். ஆதலால், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

அசாம் மாநிலத்தில் உள்ள தேர்தல் சூழல் பற்றி எனக்கு நன்கு தெரியும். அங்கு பாஜகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்புகிறேன். அசாம் மாநிலத்தில் மற்ற கட்சிகளைவிட பாஜக வலுவாக இருக்கிறது. ஆனால், மற்ற 4 மாநிலங்களில் பாஜக தோல்வியைத் தழுவும். ஏனென்றால், மற்ற 4 மாநிலங்களில் பாஜக,பாஜக கூட்டணியைவிட, மற்ற கட்சிகள் வலுவாக இருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் நாட்டுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கும்.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x