Published : 13 Mar 2021 04:06 PM
Last Updated : 13 Mar 2021 04:06 PM

பாஜக வேட்பாளர்களாக சுரேஷ் கோபி, முரளிதரன்?- விறுவிறுப்படையும் கேரள தேர்தல் களம்

திருவனந்தபுரம்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் நேமம் தொகுதியில் பிரபல மலையாள நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது. இதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வும் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்து இறுதி செய்ய பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று மாலை கூடுகிறது.

பிரதமர் மோடி தலைமையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உறுப்பினர்கள் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவை பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் வென்ற நேமம் தொகுதியில் பிரபல மலையாள நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த தொகுதியில் தற்போதைய பாஜக எம்எல்ஏவாக இருக்கும் ராஜகோபாலனுக்கு வயதாகி விட்டதால் அவருக்கு பதில் சுரேஷ் கோபி களமிறக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

அதுபோலவே கொட்டாரகரா தொகுதியில் நடிகர் வினு மோகன் போட்டியிடக் கூடும். இரிஞ்சாலகுடா தொகுதியில் முன்னாள் டிஜிபியியும் அண்மையில் பாஜகவில் இணைந்தவருமுான ஜேக்கப் தாமஸ் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

திருவனந்தபுரம் வட்டியூர்காவூ தொகுதியில் முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் போட்டியட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கொல்லம் மாவட்டம் சந்தனூர் அல்லது திருவனந்தபுரம் களக்கூட்டம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ஷோபா சுரேந்திரன் வேட்பாளராக போட்டியிடக்கூடும்.

பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மஞ்சேஸ்வரம் மற்றும் கோனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி தற்போதைய மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான முரளிதரனும் தேர்தலில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தீப் வாரியார் பாலக்காடு மாவட்டம் திருதலா தொகுதியில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x