Last Updated : 05 Nov, 2015 07:55 PM

 

Published : 05 Nov 2015 07:55 PM
Last Updated : 05 Nov 2015 07:55 PM

நிதிஷ் அணி - பாஜக கூட்டணிக்கு சம வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 'நிதிஷ் - லாலு - காங்.' மகா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சம வாய்ப்பு இருப்பதாகவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இறுதி கட்டத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், பிஹாரில் அனைத்து 243 தொகுதிகளுக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வியாழக்கிழமை மாலை வெளியாகின.

பல்வேறு தொலைக்காட்சி மற்றும் தனியார் அமைப்புகள் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து கணிப்புகளில், இரு அணிகளுக்குமே சம வாய்ப்பு நிலவுவதும், ஒருவேளை இழுபறிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

பிஹாரில் கடந்த அக்டோபர் 12-ல் ஐந்து கட்டமாக துவங்கிய சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்தது. இங்கு வெற்றி பெற்ற கூட்டணி ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இதன் இறுதி முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம்:

இந்தியா டுடே-சிசீரோ இணைந்து வெளியிட்டக் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி மற்றும் நிதிஷ் - லாலு - காங். கூட்டணி ஆகிய இருவருமே முன்னணி வகிக்கின்றனர். இதில், பாஜக அணிக்கு 113 முதல் 127 வரையிலான தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நிதிஷ் அணிக்கு 111 முதல் 123 தொகுதிகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. மற்றக் கட்சிகளுக்கு 4 முதல் 8 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனவும் இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா டிவி-சி வோட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி பாஜக அணிக்கு 101 முதல் 121-ம், இதை விட அதிகமாக நிதிஷ் - லாலு - காங். கூட்டணிக்கு 112 முதல் 132 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி மற்ற கூட்டணி அல்லது கட்சிகளுக்கு வெறும் 6 முதல் 14 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், நிதிஷ் - லாலு - காங். கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, இந்த அணிக்கு 122 மற்றும் பாஜக கூட்டணிக்கு 111 மட்டுமே கிடைக்கும் எனக் கூறியுள்ளது.

இதே கருத்தை, ஏபிபி-நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிலும் வெளியாகி உள்ளது. அதன்படி, நிதிஷ் - லாலு - காங். கூட்டணிக்கு 130-ம், பாஜக கூட்டணிக்கு வெறும் 108 தொகுதிகள் மட்டும் கிடைக்கும் எனக் கூறியுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனவும் ஏபிபி மற்றும் நீல்சன் தன் கருத்துக் கணிப்பில் வெளியிட்டுள்ளன.

ஆனால், மற்றொரு தொலைக்காட்சி சேனலான நியூஸ் எக்ஸ், பாஜக அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளது. இதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜக அணிக்கு 126-ம், நிதிஷ் - லாலு - காங். அணிக்கு 110 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறியுள்ளது.

நியூஸ் நேஷன் எனும் தொலைக்காட்சி சேனலின் கருத்துக் கணிப்பும் பாஜக கூட்டணிக்கே சாதகமாக வெளியாகி உள்ளது. இதில், பாஜக அணிக்கு 115 முதல் 119-ம், நிதிஷ் - லாலு - காங். கூட்டணிக்கு 120 முதல் 124 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனக் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு பின், பாஜக பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டியை சந்திக்க நேர்ந்தது. இங்கு அதற்கு ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியோர் இணைந்து மகா கூட்டணி எனும் பெயரில் அமைத்த கூட்டணியுடன் நேரடிப் போட்டி நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x