Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் 2 நாள் வேலை நிறுத்தம்

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுசெயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறும்போது, ‘ஏற்கெனவே பொதுத்துறை வங்கியான ஐடிபிஐயின் பெரும்பான்மை பங்குகளை எல்ஐசியிடம் 2019ல் விற்றுள்ளது. மேலும் கடந்த நான்குஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகளை இணைத்துள்ளது. தற்போது மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மார்ச் 4, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தசாதகமான முடிவும் எட்டப்படவில்லை. எனவே வங்கி ஊழியர்சங்கங்கள் இணைந்து மார்ச்15, 16 இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொள் வார்கள்’ என்று கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பில், அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.இந்தச் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x