Published : 11 Mar 2021 04:28 PM
Last Updated : 11 Mar 2021 04:28 PM

உடலில் காயம்- சிகிச்சையில் இருக்கிறேன்; 3 நாட்களில் பணியை தொடங்குவேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தாவில் இருந்து விரைவில் புறப்படுவேன், எனது பணிகளை 2 முதல் 3 நாட்களில் தொடங்குவேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார். 4 பேர் அவரை கீழே தள்ளி விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும் அப்போது காவலர்கள் யாரும் அங்கு இல்லை எனவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபஜித் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஆனால் மம்தா பானர்ஜி அரசியல் நாடகம் நடத்துவதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இந்தநிலையில் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘நேற்று எனது கார் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென தள்ளப்பட்டேன். தற்போது நான் சிகிச்சையில் உள்ளேன். எனது கால், முட்டு, கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து விரைவில் புறப்படுவேன். எனது பணிகளை 2 முதல் 3 நாட்களில் தொடங்குவேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும். யாருக்கும் எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x