Published : 11 Mar 2021 01:03 PM
Last Updated : 11 Mar 2021 01:03 PM

‘‘பொய்களை பரப்பாதீர்கள். தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்: காயமடைந்த மம்தா பானர்ஜிக்கு பாஜக பதிலடி

கொல்கத்தா

மம்தா பானர்ஜி கிழே விழுந்து காயமடைந்த சம்பவத்தை வைத்து பொய்களை பரப்பாதீர்கள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் என பாஜக துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார். 4 பேர் அவரை கீழே தள்ளி விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும் அப்போது காவலர்கள் யாரும் அங்கு இல்லை எனவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபஜித் பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மே 2, ஞாயிற்றுக்கிழமை வங்க மக்களின் சக்தியைக் காணப்போகிறீர்கள். பாஜக உங்களைத் தூண்டுகிறது. தயாராய் இருங்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

இதுபோலவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜியை பலவீனப்படுத்த வேண்டும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவிடக்கூடாது என்ற சதி நடைபெறுகிறது’’ எனக் கூறினார்.

இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து மேற்குவங்க மாநில பாஜக துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி கூறியதாவது:

தாக்குதல் நடந்ததாக கூறி தவறான தகவல்களை மம்தா பானர்ஜியும், திரிணமூல் காங்கிரஸும் பரப்பி வருகிறது. இதனை சற்றும் ஏற்க முடியாது. தேர்தல் சமயத்தில் அரசியல் ரீதியாக பிரச்சாரம் செய்வதற்காக இந்த சம்பவத்தை மம்தா பானர்ஜி பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறார்.

மம்தா பானர்ஜி கீழே விழுந்தபோது என்ன நடந்தது, எப்படி நடந்தது, யார் காரணம், போலீஸ் பாதுகாப்பு இல்லையா, அப்படி என்றால் ஏன் பாதுகாப்பு இல்லை என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x