Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை குறிக்கும் வகையில் நடைபெறவுள்ள அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை குறிக்கும் வகையில், நாடு முழுவதும் 75 இடங்களில் பிரம்மாண்டமான விழா நடைபெறும் என ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை குறிக்கும் வகையில், அம்ரித் மஹோத்சவ் விழா நடைபெற உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் வரும் 12-ம் தேதி (நாளை) இவ்விழா தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 75 இடங்களில் 75 வாரங்களுக்கு இவ்விழா தொடர்ந்து நடைபெறும். எம்.பி.க்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தேவையான வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எம்.பி.க்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சியை பாராட்டும் தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார்.
கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை பாஜகவினர் செய்து கொடுத்ததாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT