Published : 10 Mar 2021 04:17 PM
Last Updated : 10 Mar 2021 04:17 PM

நந்திகிராமில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனுத் தாக்கல்

சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதை அடிப்படையாகக் கொண்டு மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியை அகற்ற பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.

இதில் திரிணமூல் காங்கிரஸ் அரசில் கேபினட் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி நந்திகிராமில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று (மார்ச் 10) 2 கி.மீ. தூரம் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் ''மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள்தான் தேவை'' என்ற தலைப்பில் சாலைப் பேரணியில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து ஹால்தியா துணைப் பிராந்திய அலுவலகத்தில் இன்று மம்தா பானர்ஜி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் தலைவர் சுப்ரதா பக்‌ஷி உடன் இருந்தார்.

இந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x