Last Updated : 10 Mar, 2021 03:11 AM

 

Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

மதரஸாக்களில் ராமாயணம் மகாபாரத பாடங்கள் அறிமுகம்: உ.பி. மவுலானாக்கள் கடும் எதிர்ப்பு

புதிய கல்விக் கொள்கையின்படி தேசிய திறந்தவெளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) புதியபாடத்திட்டங்களை அறிமுகப்படுத் தியது. மத்திய கல்வித் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இதுசெயல்படுகிறது. இதன் பாடத்திட்டங்கள், என்ஐஓஎஸ் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களுக்கு மட்டும் பொருந்தும்.

இதன் கீழ் நாடு முழுவதிலும்செயல்படும் ஒரு பகுதி குருகுலங்களுடன் சேர்த்து இஸ்லாமியர்களின் 100 மதரஸாக்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மதரஸாக்களில் சுமார் 50,000 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கையின்படி பண்டைக்கால வரலாறாக ஐந்து வகைப் பாடப்பிரிவுகளை என்ஐஓஎஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், வேதங்கள், விஜானா, யோகா, சம்ஸ்கிருதம், தொழிற்கல்வி ஆகியவை உள்ளன. வேதங்கள் பிரிவில் ராமாயணம், மகாபாரதப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து லக்னோ ஈத்கா மசூதியின் இமாமும் தாரூல் உலூம் பிரங்கி மஹாலின் தலைவருமான மவுலானா காலீத் ரஷீத் கூறும்போது, “தனியாராலும் உ.பி. அரசின் நிதி உதவியாலும் இரண்டு வகை மதரஸாக்கள் உள்ளன. இதில் தன்னிடம் அங்கீகாரம் பெற்ற மதரஸாக்களின் பாடத்திட்டங்களை வகுக்கும் உரிமை என்ஐஓஎஸ்-க்கு இல்லை. தனியார் மதரஸாக்களில் தலையிடும் உரிமையும் அதற்கு கிடையாது என்பதால் அதன் புதிய பாடத்திட்டங்களை மதரஸாக்கள் ஏற்கக் கூடாது” என்றார்.

இவர், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

லக்னோவின் மற்றொரு முக்கிய மவுலானாவும் மதரஸா சுல்தான் அல்-மதராஸின் நிர்வாகக்குழு உறுப்பினருமான யாகூப் அப்பாஸ் கூறும்போது, “மதரஸாக்களில் ராமாயணம், மகாபாரதப் பாடங்களை அறிமுகப்படுத்தும் அரசு, குருகுலங்களில் புனிதக்குர்ஆனை போதிக்க உத்தரவிடுமா? இதுபோல், இஸ்லாமியக் கல்வி நிலையங்களிலும் தலையிடுவார்கள் எனில் அதை முஸ்லிம் சமுதாயம் கடுமையாக எதிர்க்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x