Published : 09 Mar 2021 03:27 PM
Last Updated : 09 Mar 2021 03:27 PM

‘‘தமிழகத்தில் நாங்கள் தான் மாற்று அரசியல் சக்தி; தினகரனுடன் இணைந்து 12-ம் தேதி முதல் பிரச்சாரம்’’- ஒவைசி அறிவிப்பு

ஹைதராபாத்

மார்ச் 12-ம் தேதி முதல் தினகரனுடன் இணைந்து நான் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளேன். தமிழகத்தில் நாங்கள் மாற்று அரசியல் சக்தியாக உருவாகுவோம் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து இரு தினங்களில் தெரியவரும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற பிஹார் தேர்தலில் 5 இடங்களைக் கைப்பற்றியது. மேலும், கணிசமான வாக்குகளையும் பிரித்ததால், காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணிக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள ஒவைசியின் கட்சி, பிஹாரைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று தமிழகத்திலும் காலூன்ற ஏஐஎம்ஐஎம் கட்சி தீர்மானித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவைசி கட்சிக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் போட்டியிட பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதுகுறித்து அசாதுதீன் ஒவைசி இன்று கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி டிடிவி தினகரனின் அமமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. எங்களுக்கு வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் 12-ம் தேதி முதல் தினகரனுடன் இணைந்து நான் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளேன். தமிழகத்தில் நாங்கள் மாற்று அரசியல் சக்தியாக உருவாகுவோம். எங்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x