Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

சண்டிகரில் கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீஸுக்கு பாராட்டு

சண்டிகரில் கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீஸுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சண்டிகர் போக்குவரத்து போலீஸ் பிரிவில் பிரியங்கா பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. 6 மாத மகப்பேறு விடுமுறைக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி அவர் பணியில் சேர்ந்தார்.

கடந்த 5-ம் தேதி அவர் கைகுழந்தையுடன் பணிக்கு வந்துசெக்டர் 29 பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள், கைக்குழந்தையுடன் பிரியங்கா பணியாற்றுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்தவீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பெண் போலீஸ் பிரியங்கா கூறியதாவது:

குறை மாதத்தில் எனது மகன் பிறந்துள்ளான். எனது கணவரும் குடும்பத்தினரும் மகேந்திரகர் பகுதியில் வசிக்கின்றனர். எனவே சண்டிகரில் எனது வீடு அருகே பணி ஒதுக்கும்படி கேட்டிருந்தேன். 2 நாட்கள் எனது வீட்டுக்கு அருகே பணி ஒதுக்கப்பட்டது.

ஆனால் 3-வது நாளில் தொலைவில் உள்ள செக்டர் 29 பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிடப்பட்டது. எனது குழந்தையை தனியாக விட்டுச் செல்ல முடியாது என்ப தால் அவனை கையில் தூக்கிச் சென்றேன். தற்போதைக்கு எளிதான பணி வழங்கும்படி கோரியுள்ளேன். இதை உயரதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சண்டிகர் போக்குவரத்து எஸ்எஸ்பி மணிஷா சவுத்ரி கூறும்போது, ‘‘குழந்தையை கையில் வைத்துக் கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாது. பிரியங்கா குறித்த தகவல் கிடைத்தவுடன் அவரை எளிதான வேறு பணிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

கை குழந்தையுடன் கடமையாற்றிய பிரியங்காவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x