Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

கேரளாவில் இடதுசாரி, புதுச்சேரி, அசாமில் பாஜக, மே.வங்கத்தில் திரிணமூல்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்: டைம்ஸ் நவ், சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி அசாமில் 3, மேற்கு வங்கத்தில் 8, கட்டங்களாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையடுத்து, 5 மாநிலங் களிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 158 இடங்கள் கிடைக்கும். இது 2016 தேர்தலில் கிடைத்ததைவிட 60 இடங்கள் கூடுதல் ஆகும். ஆளும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு 65 இடங்கள் கிடைக்கும்.

முதல்வர் பதவிக்கான கருத்து கணிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் 38% பேரின் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். இப்போதைய முதல்வரும் அதிமுக இணைஒருங்கிணைப்பாளருமான பழனிசாமிக்கு 31 சதவீதம் பேரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு 7.4% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் மொத்தம் உள்ள140 தொகுதிகளில் 82 இடங்களில்வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியை தக்கவைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 56 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 1 இடம் மட்டுமே கிடைக்கும்.

அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக, அசாம் கண பரிஷத் கூட்டணி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். காங்கிரஸ், ஏஐயுடிஎப் கூட்டணிக்கு 57 இடங்களும் பிற கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30-ல் 18 இடங்களில் வெற்றிபெற்று பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

இவ்வாறு கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும். அக்கட்சிக்கு மொத்தம்உள்ள 294-ல் 154 இடங்கள் கிடைக்கும்.

இங்கு 107 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். இத்தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டாலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இக்கூட்ட ணிக்கு 33 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x